Saturday, August 25, 2012

தாய்மொழி

Posted by K. Ezhil Kumar | Saturday, August 25, 2012 | Category: |



பன்மொழி பயின்ற பாவலர் ஆயினும்

சிந்திக்கும் மொழியோ தித்திக்கும் தாய்மொழி !

உள்ளத்தில் உறைந்திட்ட உறங்கிடும் உணர்வுகளை

உலகிற்கு உரைத்திட உதவிடும் தாய்மொழி !

எல்லையிலா எண்ணங்களை எழிலோடு வடித்திட

ஏற்றமிகு எழுதுகோல் என்றென்றும் தாய்மொழி !


இமைதிறந்த நாள்முதல் இதயம்நிற்கும் நேரம்வரை

குறையாத செல்வம் உடனிருக்கும் தாய்மொழி !

முகமறியா முகம்கூட உரிமையுடன் உறவாடி

முகவரியை முன்மொழியும் முத்தான தாய்மொழி !

உல்லாசப் பயணமாய் உலகையே சுற்றினாலும்

உடன்வருவது உயிரோடுக் கலந்திட்ட தாய்மொழி !


விந்தைமிகு விஞ்ஞானம் விண்ணளவு வளர்ந்தாலும்

வியத்தகு விளைச்சலின் வித்தாக தாய்மொழி !

அலுவல் ஆய்வென்று அயல்நாட்டை அடைந்தாலும்

அடையாளம் காட்டிடும் அவரவர் தாய்மொழி !

சுழலும் பூமிதனில் சுடரொளியாய் திகழ்ந்திட

ஒளியேற்றும் திருவிளக்கு நிகரில்லா தாய்மொழி !


யாசிக்கும் உயிர்களில் நேசிக்கும் நெஞ்சங்கள்

சுவாசிக்கும் காற்றே பேசுகின்ற தாய்மொழி !

மனமாற்றம் செய்திட்டு மதமாற்றம் செய்தாலும்

மாற்ற இயலாதது உயிரான தாய்மொழி !

வாழும் காலம்வரை வணங்கிப் போற்றிடுவோம்

இயங்கிடும் இதயத்தின் இதயமான தாய்மொழி !

[[ இணையதளத்திலிருந்து தமிழ் தாயகத்திற்காக ]]
என்றும் உங்கள் நண்பன்
கர்ணன்





Currently have 0 comments:


Leave a Reply